கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட யானை பள்ளம் என்ற இடத்தில், கடந்த மூன்று நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த 15 வயது பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர். பின்னர் அங்கேயே யானை புதைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், "கோவை வனக்கோட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் 17 யானைகள் உயிரிழந்தன. யானைகளுக்கு இடையேயான மோதல் காரணமாக நான்கு யானைகளும், நோய்வாய்ப்பட்டு 10 யானைகளும் உயிரிழந்தன. ஜீரணக் கோளாறு காரணமாகவே பெரும்பாலான யானைகள் உயிரிழந்தன. தற்போது இறந்த யானை குரோனிக் பாய்சனால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
குரோனிக் பாய்சன் என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகிறது. உலகளவில் இந்த குரோனிக் பாய்சனால்தான் யானைகள் தற்போது உயிரிழந்துவருகின்றன. இன்று உயிரிழந்த யானையைப் போலவே இதற்கு முன்பு மூன்று யானைகள் போளுவம்பட்டி வனச்சரகத்தில் உயிரிழந்தன" என்றார்.
![கோவை மாவட்டச் செய்திகள் கோவை யானை மரணம் குரோனிக் பாய்சன் elephant death covai elephant death chronic poison](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-elephant-death-visu-7208104_10082020175818_1008f_02283_445.jpg)
வனத்துறை மருத்துவர் சுகுமார் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக யானைகள் உயிரிழப்புகள் ஒரே மாதிரியாக உள்ளன. அதனால், அதன் உடற்கூறாய்வு முடிவுகள், பாகங்களை ஆய்வுகளுக்காக அனுப்பினோம். இதற்கு முன்பு இதேபோல் உயிரிழந்த யானைகளை பத்து நாட்கள் கழித்து உடற்கூறாய்வு செய்ததால் சரியான முடிவுகளைப் பெற முடியவில்லை.
தற்போது உயிரிழந்துள்ள யானையின் உறுப்புகள் நன்றாக இருப்பதால் என்ன மாதிரியான பாதிப்பு என்பதைக் கண்டறிய அதன் உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த விளைப்பொருட்களைத் தொடர்ச்சியாக யானைகள் உட்கொள்வதால் இதுபோன்ற மரணங்கள் ஏற்படலாம். ஆனால், விரிவான ஆராய்சியின் மூலம்தான் யானைகளின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய முடியும்" என்றார்.
இதையும் படிங்க: யானைகளின் தொடர் உயிரிழப்பு: சிறப்பு கண்காணிப்புக் குழு ஆய்வு!