மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி திருச்சி, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் இது குறித்து மாநாட்டு திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை பொது செயலாளர் மயிலை அப்துல் ரஹீம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த மாநாட்டில் தற்போது சமூகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட உள்ளோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக மீண்டும் அயோத்தி போன்ற பிரச்சினையை முன்னெடுக்கிறது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இணக்கமாக இருந்து வழிபாடு நடத்திய இடத்தில் திடீரென பாஜக உள்ளே நுழைந்து பலியிடக்கூடாது என்று கூறுகிறது. இது அடுத்த அயோத்தி பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. அதேபோல் இந்த பிரச்சினையை திமுக சரியாக கையாள வேண்டும். அங்கு அமைதியை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“சீமான் பாஜகவின் கள்ளக்குழந்தை”:
சீமான் கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட போது அவர் பெற்ற வாக்குகள் 12 ஆயிரம் மட்டும் தான். இந்த முறை அதிமுக, பாஜக போட்டியிடவில்லை. ஆனால், பெரியாரை எதிர்க்கும் பாஜகவின் ஓட்டுகள், பெரியாரை எதிர்க்கும் சீமானுக்கு விழுந்துள்ளது. எனவே சீமான் பாஜகவின் கள்ளக்குழந்தையாக இருக்கிறார். அவரால் ஒருபோதும் பெரியாரை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது.
“டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்விக்கு இதுதான் காரணம்”:
நடந்து முடிந்த டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்தியா கூட்டணியில் அவர்கள் இணைந்து காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தால், ஆட்சியை இழந்திருக்காது. ஆனால், கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசல்கள், கட்சி தலைமையில் இருக்கும் முரண்பாடுகளால், அவர்கள் இந்த கூட்டணியை வைக்க தவறிவிட்டனர். இதை இப்போது தேர்தல் முடிந்து சிந்திக்கின்றனர். இதே நிலைப்பாடு தான் மம்தா பானர்ஜியும் கூட்டணியில் இருந்து வெளியேபோவதாக கூறியுள்ளார். ஆனால் பாஜக என்ற பாசிச ஆட்சியை நாம் தோல்வியடைய செய்ய வேண்டும். அதற்கு கூட்டணியாக இருந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றியடைய முடியும். எனவே, நாம் அனைவரும் இந்தியா கூட்டணியில் இணைந்து பணியாற்றிட வேண்டும்.
இதையும் படிங்க: "தேசமும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும்" - பழனி முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்!
“திமுக அரசும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடும்”:
திமுக தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில், வெற்றி பெற்றால் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தருவோம் என்று கூறினார்கள். ஆனால், பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார்கள். இந்நிலையில், இன்று வரை அந்த இடஒதுக்கீடு தொடர்பாக எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. எனவே, தமிழக அரசு அதை உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்றார்.