தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் போராட்டத்தின் 7ஆவது நாளான இன்று 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் திருவோடு ஏந்தியவாறும், தட்டுகளை ஏந்தியவாறும், நெற்றியில் நாமம் போட்டபடியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில், நான்காரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் 3.50 லட்சம் பேருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் ஆதிசேஷையா குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அளித்த குற்ற குறிப்பாணைகளை ரத்துசெய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அமமுகவா, அதிமுகவா? சசிகலா கழுத்தில் கிடந்த துண்டால் குழப்பத்தில் தொண்டர்கள்!