கோவையில் கரோனா பாதிப்பில் முதலில் அனுமதிக்கப்பட்ட 26 வயது மாணவி ( ஸ்பெயினிலிருந்து திரும்பியவர்), பெண் மருத்துவர், 10 மாத குழந்தை, வீட்டு பணிப்பெண், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஆகிய ஐந்து பேரும் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மருத்துவமனையில் கடந்த 14 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின் எவ்வித அறிகுறியும் தென்படாத நிலையில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பாக அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
இருப்பினும் வருகிற 28 நாள்கள் அவர்கள் அவரவரது வீட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இடையில் ஏதேனும் உடல் உபாதைகள் தென்பட்டால் மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். தற்போது அந்த மருத்துவமனையின் 59 பேர் வைரஸ் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ”கோவையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வைரஸ் பாதிப்பு இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவையில் கரோனா அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஈஎஸ்ஐ மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோவையில் 13 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்து கட்டடங்களிலும் தயார் நிலையில் உள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் 140 வென்ட்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. அதுமட்டுமின்றி கூடுதல் மருத்துவ உபகரணங்கள் இன்னும் இரு நாள்களில் வரவுள்ளது.
அதுமட்டுமின்றி வருகின்ற பத்தாம் தேதி முதல் முதலமைச்சர் அறிவித்த ரேபிட் டெஸ்ட் பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளைச் சுற்றி இரண்டு கிலோ மீட்டருக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி, மருத்துவர்களை கொண்டு பரிசோதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அன்னூர் ஆனைமலை மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோவை மாநகர் பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்
இதையும் படிங்க: கரோனா வைரஸ் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்ட எம்எல்ஏ ஆஸ்டின்!