கோயம்புத்தூர் கொடிசியா அரங்கில் தமிழ்நாடு கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கிறிஸ்தவ மக்கள் அளித்த கோரிக்கைகளை பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். ஜெருசலேம் பயணத்திற்கு தற்போது 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் அது 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஜெருசலேம் செல்பவர்களின் எண்ணிக்கை 500 இல் இருந்து ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் கல்வி உயர்ந்த நிலையில் இருக்க கிறிஸ்துவ பள்ளிகள் தான் காரணம். முதலமைச்சர் ஜெயலலிதாவும் கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தார். என்னுடைய மகனும் கிறிஸ்துவப் பள்ளியில் தான் படித்தார். சிறுபான்மை இன மக்கள் இனி அச்சப்படத் தேவை இல்லை. அனைத்து மத நிகழ்வுகளிலும் அதிமுகவினர் கலந்துகொள்வார்கள். தேர்தலில் கூட்டணிகள் மாறினாலும் கொள்கைகள் என்றும் மாறாது. எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் வழியில் அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.
இந்த விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: ஜெ. பிறந்தநாள்: 123 சர்வ சமய இணையருக்கு சீர்வரிசையுடன் திருமணம்