கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மழைக்காலத்திற்கு முன்பான கோடைக்கால விலங்குகள் கணக்கெடுப்பு, டிசம்பர் மாதம் குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்தாண்டுக்கான மழை காலத்திற்கு முன்பான வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் இன்று தொடங்கி வரும் ஜூன்16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் இன்று தொடங்கிய கணக்கெடுப்பில் 52 இடங்களில் 104 நேர்கோடு பாதைகள் அமைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட வனத் துறையினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பணியைத் தொடங்கினர்.
முதல் மூன்று நாட்கள் மாமிச உண்ணிகள் கணகெடுக்கப்படுகின்றன. சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் கால் தடம், கழிவுகள், நேரடிப் பார்வை போன்ற வகையில் கணக்கெடுக்கப்படுகிறது.
அடுத்த தினங்களில் அதிகாலையில் யானை, மான் உள்ளிட்ட தாவர உண்ணிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இன்று பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் வனப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் மாரிமுத்து, பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் கலந்துகொண்டு கணகெடுக்கும் பணியை தொடங்கிவைத்தனர். தடங்காட்டி கருவி, அலைபேசி செயலி மூலம் கணக்கெடுப்புப் பணி நடப்பது குறிப்பிடத்தக்கது.