சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக நியமனம் செய்யப்பட்ட குழுவுடன், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தத் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள தேடுதல் குழுவின் தலைவரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான ஜெகதீஸ்குமார், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராமசாமி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மருதமுத்து ஆகியோருடன் சென்னை பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தரை தேர்வு செய்வது குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதேபோல் தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தரை தேர்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவின் தலைவரும், மாகாத்மா பூலே கிரிஷ்வித்யாபதி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான விஸ்வநாதா, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பிரபாகரன், பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் தேவராஜ் ஆகியோருடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
இந்தத் துணை வேந்தர் நியமனங்களில் வெளிப்படையான நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுமாறும், திறமையான மற்றும் நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்குமாறும் குழுவினரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். துணை வேந்தர் பதவிக்கான அறிவிப்பானது, நியமனக் குழுக்களால் விரைவில் தனித்தனியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீர் தீ விபத்து