சென்னை: திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் என்கிற அசோக் (29). இவர் மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் திருட்டு, ஆள் கடத்தல், கொள்ளை, வெடிகுண்டு வீசுதல் போன்ற ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, ஆள் கடத்தல் என இரண்டு வழக்குகள், தேனி மாவட்டத்தில் கொள்ளை தொடர்பான வழக்கு, சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு, திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கார்களைப் பெட்ரோல் ஊற்றி எரித்து, அப்பகுதி மக்களை கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் காவல் துறையினர் பிரவீனை கைதுசெய்து ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
அதேபோல் சென்னை மேடவாக்கம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சத்தியகுமார் என்கிற சத்தியா (36) மீது அடிதடி, கொள்ளை, கொலை முயற்சி, கத்தியைக் காட்டி வழிப்பறிச் செய்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சத்தியகுமாரை பள்ளிக்கரணை காவல் துறையினர் ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 2,296 பேருக்கு கரோனா!