சென்னை: திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பழங்கால உலோக சிலைகள் திருடப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விக்ரபாண்டியம் காவல் நிலையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்திய போது, கோயிலில் இருந்த விஷ்ணு, தேவி, பூதேவி, யோக நரசிம்மர், விநாயகர், நடன சம்பந்தர், சோமாஸ்கந்தர், நின்ற நிலையிலுள்ள விஷ்ணு, நடனமாடும் கிருஷ்ணா ஆகிய 9 சிலைகளும் போலியான சிலைகள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன்பின் புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டியூட் மூலமாக திருடப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை பெற்று, அதை ஒப்பிட்டு உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகம், ஏல மையங்களில் இணையதளம் வாயிலாக மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் திருவாரூரில் திருடப்பட்ட விஷ்ணு, தேவி, பூதேவி ஆகிய சிலைகளும், அமெரிக்கா மிசோரி மாகாணத்தில் கன்சாஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் யோக நரசிம்மர், விநாயகர் சிலைகளும் இருப்பது தெரியவந்தது.
![பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டியூட்டில் உள்ள சிலை கூறித்த ஆவணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-idol-script-7202290_25102022095656_2510f_1666672016_371.jpg)
![பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டியூட்டில் உள்ள சிலை கூறித்த ஆவணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-idol-script-7202290_25102022095656_2510f_1666672016_1036.jpg)
![பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டியூட்டில் உள்ள சிலை கூறித்த ஆவணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-idol-script-7202290_25102022095656_2510f_1666672016_428.jpg)
இந்த நிலையில் அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் உள்ள பிரியர் சாக்லர் அருங்காட்சியத்தில் ஆத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தர் சிலையும், கிறிஸ்டிஸ்.காம் இணையத்தில் நடன சம்பந்தர் சிலைகள் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இதனை சிலை நிபுணர்களும் உறுதிப்படுத்தினர்.
திருடப்பட்ட சோழர் கால சிலைகள் கண்டுபிடிப்பு: திருவாரூர் மாவட்டம் ஆத்தூரில் இருந்து திருடப்பட்ட சோமஸ்கந்தர் மற்றும் நடன சம்பந்தர் சிலைகள் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிலைகள் என்பதும், திருடப்பட்ட சிலைகளை கடந்த 2011 ஆம் ஆண்டு 98,500 டாலருக்கு அமெரிக்காவில் உள்ள இந்த அருங்காட்சியத்திற்கு விற்கப்பட்டிருப்பதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
![அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள சிலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-idol-script-7202290_25102022095656_2510f_1666672016_542.jpg)
![அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள சிலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-idol-script-7202290_25102022095656_2510f_1666672016_786.jpg)
இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள இரு சிலைகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர உரிய ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழ்நாடு அரசிடம் சமர்பித்துள்ளனர். யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே, அமெரிக்கா அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5 சிலைகள், தற்போது அமெரிக்கா வாஷிங்டன் அருங்காட்சியகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிலைகள் என மொத்தம் 7 சிலைகளை உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சேலத்தில் அரசு மருத்துவமனையில் பெயிண்டர் படுகொலை