எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகளின் முடிவு நேற்று (ஜூன் 5) வெளியானது. இதில் தோல்வியடைந்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் இரங்கலையும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “தமிழ்நாடு மாணவச் செல்வங்களின் மருத்துவ கனவில் மண்ணள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த அன்பு மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.
இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப்போகிறது? இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கருக்கிடப் போகிறது? நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் இரண்டாண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது?
பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்? ” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.