சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள செப்டிக் டேங்கிலிருந்து கழிவுநீரை ஏற்றி செல்லும் லாரிகள் பல்லாவரம் கவுல் பஜாரில் உள்ள அடையாறு, பொழிச்சலூர் சர்வீஸ் சாலையில் கழிவுநீரை ஊற்றிவருகின்றது.
இதனை அப்பகுதி மக்கள் பலமுறை கண்டித்தும், நகராட்சியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும், அப்பகுதியில் தொடர்ந்து கழிவுநீர் ஊற்றப்படுவதால் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும், துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிவந்தனர்.
இதையடுத்து, அடையாற்றில் கழிவுநீர் ஊற்றுவதாக அப்பகுதி மக்கள் சங்கர் நகர் காவல் நிலையைத்தில் புகார் அளித்தனர். பின்னர் புகாரின் அடிப்படையில் அடையாற்றில் கழிவு நீர் ஊற்ற வரும் லாரிகளை காவல் துறையினர் பார்வையிட்டு வந்தனர். அப்போது கவுல் பஜாரில் கழிவு நீர் ஊற்ற அடுத்தடுத்து வந்த மூன்று லாரிகளை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். இதில் லாரி ஓட்டுனர்கள் மூன்று பேரும் தப்பி ஓடினர்.
பின்னர், காவல் துறையினர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் பொழிச்சலூரைச் சேர்ந்த வாணன்(32), அனந்தன் (32), திருநீர்மலையைச் சேர்ந்த கந்தன்(31) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க:
ரைஸ் மில்லில் 28 லட்சம் ரூபாய் கையாடல் செய்த ஊழியர்கள் கைது!