குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டியிருந்தது. ஆனால் இதில் திமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. "உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.
மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை காங்கிரஸுக்கு வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்துக்குப் புறம்பானது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ப. சிதம்பரமும் உரிய இடங்களைத் திமுக தர வேண்டும் எனப் பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு 12 வாக்குகளுடன் அதிமுக வெற்றிபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி 11 இடங்களையும், அதிமுக 8 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்த நிலையில், திமுகவுக்கு 9 வாக்குகளே கிடைத்துள்ளது. இரண்டு இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், குலுக்கல் முறையில் துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்ததால்தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக திமுகவினர் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ”திமுகவுக்கு ஆதரவளித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும்” என கே.எஸ். அழகிரி சமாதான அறிக்கை வெளியிட்டிருந்தாலும் பிரச்னை முடிந்தபாடாகத் தெரியவில்லை. இனி வரும் நாள்களில் திமுக தலைமையை காங்கிரஸ் சமாதானம் செய்யுமா? நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இவ்விரு கட்சிகள் இடையே கூட்டணி தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திமுக ஊராட்சி மன்றத் தலைவி மீது அதிமுகவினர் தாக்குதல் - போலீசார் விசாரணை