தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, அதில் மலைவாழ், பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பழங்குடியின குழந்தைகள் வேறு வேலைக்குச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு தொடர்ந்து நான்கு மாதம் இலவச அரிசி மற்றும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பழங்குடியினர் உள்ள பகுதிகளுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் கல்வியா? ஸ்மார்ட்போன், டிவியில்லாத நாங்கள் என்ன செய்வது? பழங்குடியின மாணவர்கள்!