சென்னை: தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பை அதிகரிப்பதாக பெருமை கொள்ளலாம், ஆனால் புலிகள் காப்பகங்களில் காடுகளின் பரப்பை குறைந்து வருகிறது என்றே சொல்லலாம்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வன ஆய்வு (FSI) மூலம் கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்திய வன அறிக்கையின் படி தமிழ்நாட்டிலுள்ள மூன்று புலிகள் காப்பகங்கள் 2021ஆம் ஆண்டு வரை வனப் பரப்பை கணிசமாக இழந்துள்ளன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ள நிலையில், புலிகள் காப்பகங்களில் வனப் பரப்பை அதிகரிக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து புலிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த நிலை தொடருமானால் எதிர்வரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய வன ஆய்வு அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 32 புலிகள் காப்பகங்களில் ஒட்டுமொத்த காடுகளின் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. புலிகள் காப்பகங்களில் வனப் பரப்பைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனைத்து அதிகாரிகளையும் ஒன்றிய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வனப்பகுதியை இழந்து வரும் புலிகள்
தமிழ்நாட்டில் ஐந்து புலிகள் காப்பகங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டிலுள்ள களக்காடு முண்டந்துறை, முதுமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை ஆகிய மூன்று புலிகள் காப்பகங்கள் வனப்பகுதியை இழந்து வருவதாக வன அறிக்கை கூறுகிறது. இதில், ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை, மாநிலத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகம் (எம்டிஆர்) மாநிலத்தின் முதல் புலிகள் காப்பகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்கு ஆர்வலர்களின் கூற்றுப்படி, மாநிலத்தில் காடுகள் ஆக்கிரமிப்புகளால் அழிக்கப்படுகின்றன. மேலும், அரசு நிறுவனங்கள் காடுகள், அதன் விளிம்புகளில் இருக்கும் சமூகங்கள் வன உற்பத்திகளை குறிவைத்து ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலை பணிகளை மேற்கொண்டு வெறுக்கிறது. இது பசுமையை குறைக்க வழிவகுக்கிறது என்கின்றனர்.
இது குறித்து பேசிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ், “புலிகள் தங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒரு முக்கியாமான இனம். இருப்பினும், புலிகள் காப்பகங்கள் பசுமையை அழிப்பதன் மூலம் அவற்றின் பசுமை பரப்பை இழந்து வருகின்றன என்பதுதான் கவலையாக உள்ளது. வன அதிகாரிகள் புலிகள் காப்பகங்களுடன் பிராந்திய காடுகளை இணைத்துள்ளனர், இது பசுமையை இழக்க வழிவகுக்கிறது. புலிகளுக்கென்று காடுகளில் ஒரு தனி இடம் தேவை. அப்போதுதான் அவைகள் ஆரோக்கியமான இரையுடன் வாழ முடியும்” என்றார்.
புலிகளின் உணவுச் சங்கிலி பாதிப்பு
இதேபோல், வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கே. அசோக சக்கரவர்த்தி கூறுகையில், "புலிகள் காப்பகங்களை ஒட்டியுள்ள பகுதிகள் கால்நடைகளால் மேய்க்கப்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகும். விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் வணிகமாக மாற்றப்பட்டு, காடுகளில் பசுமையை இழக்கிறது. புலிகள் காப்பகங்களைப் பொறுத்த வரையில், ஒரு புலிக்கு சுமார் இரண்டு கி.மீ., சுற்றளவு கொண்ட ஒரு பிரதேசம் அவசியம்.
இல்லையெனில் இனச்சேர்க்கை மற்றும் இனப்பெருக்கம் முயற்சிகள் மிகவும் கடினமாகின்றன. புலிகளின் வாழ்விடங்கள் சுருங்கினால், அது உணவுச் சங்கிலியைப் (Food chain) பாதிக்கிறது. புள்ளி மான்கள், காட்டுப் பன்றி மற்றும் மயில் உள்ளிட்டவை புலிகளின் முக்கிய இரையாகும். இருப்பினும், இந்த தாவரவகை உயிரினங்கள் புலிகள் காப்பகங்களில் வனப்பகுதியை இழப்பதால் அவை படிப்படியாக குறைந்து வருகின்றன” என்றார்.
இது குறித்து தமிழ்நாடு தலைமை வனவிலங்கு பாதுகாப்பாளர் சையது முஸாமில் அப்பாஸை தொடர்பு கொண்டு கேட்டபோது, "புலிகள் காப்பகங்களில் முழுமையான ஆய்வு நடத்தி, புலிகள் காப்பகங்களில் பசுமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 மாதமாக நடுக்கடலில் தவித்த குரங்கு பத்திரமாக மீட்பு!