சென்னை: சென்னையில் 24,29 மற்றும் 35 வயதுடைய மூன்று இளைஞர்கள் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் ஜனவரி 15, 2022 மற்றும் ஜனவரி 19, 2022 ஆகிய தேதிகளில் ஒரு வார காலத்திற்குள் கழிவுநீர் தொட்டிகளில் இறந்தனர்.
அவர்கள் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய கையால் துப்புரவு பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட்டு இறந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்தவர்களின் குடும்பத்தினர், “கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் சாக்கடைளில் மூலம் கொலைகளை தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து நபர்களையும் அடையாளம் காண அதிகாரப்பூர்வ மறு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
கல்வி உதவித்தொகை, வீட்டு வசதி, ஓய்வூதியம், சுகாதார நலன்கள் மற்றும் கண்ணியமான வேலைகள் ஆகியவற்றுடன் கையால் கழிவுகள் துப்புரவு செய்யும் நபர்களை சார்ந்திருப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க சட்டத்தின் விதிமுறைகள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். இந்த மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டிக்க வேண்டும்” என்றனர்.
இதனைத் தொடர்ந்து, கையால் மலக்கழிவுகள் அகற்றுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் தொண்டு நிறுவனமான 'சபாய் கர்மச்சாரி அண்டோலான்’, இந்த நிகழ்வை வன்மையாக கண்டித்தது.
இது தொடர்பாக, இந்த அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் வேளாங்கண்ணி கூறுகையில், "சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர் மற்றும் நவம்பர் 2021 ல் தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய உத்தரவுகளில், அனைத்து சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டி இறப்புகளுக்கு நகராட்சிகள் பொறுப்பேற்று ரூபாய் 10 லட்சம் இழப்பீடு போதுமானதாக இல்லை. அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கூறியது.
தொடரும் இந்த மரணங்கள் தமிழக அரசுக்கு வேதனை மற்றும் அவமானம். கையால் மலக்கழிவு அகற்றும் துப்புரவு தொழில் தடைச்சட்டம் 2013, கைமுறையாக கழிவுகள் துப்புரவாக்குவதற்காக நபர்களை வேலைக்கு அமர்த்துவது ஒரு குற்றமாகும்” என்றார்.