சென்னை திருவல்லிக்கேணி சுபத்ரால் தெருவில் வசித்து வருபவர் டோளாராம். இவர் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் தேவேந்திரன் (14) 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (அக்.07) தேவேந்திரன் டியூஷனுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தேவேந்திரனின் செல்ஃபோன் எண்ணிலிருந்து அவரது தந்தை டோளா ராமிற்கு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், “உனது மகன் தேவேந்திரனை கடத்திவிட்டோம். 10 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் அவனை கொன்றுவிடுவோம்” என மிரட்டியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டோளாராம், செய்வதறியாது திகைத்திருந்தபோது, மீண்டும் அவருக்கு தொடர்பு கொண்டு பேசிய சிறுவன், தன்னை ஒரு கும்பல் கடத்தி சேப்பாக்கம் மைதானத்தின் புலூ கேட் அருகே விட்டுச்சென்றதாக கூறியுள்ளார்.
இது குறித்து அண்ணா சாலை காவல் துறையினருக்குத் தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சிறுவனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவன் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஆட்டோ நம்பரை வைத்து ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்த காவல் துறையினர், அவரிடம் விசாரிக்கும்போது சிறுவன், அவரது நண்பர் ஆட்டோவில் ஒன்றாக வந்து சேப்பாக்கம் பகுதியில் இறங்கியதாக தெரிவித்துள்ளார். இதனால், சிறுவனுடன் வந்த நபர் யார் என்பது குறித்து சிறுவனிடம் விசாரித்தபோது, சிறுவன் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், சிறுவனிடம் கிடுக்குபிடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், சிறுவன் கடத்தியதாக நாடகமாடி, தந்தையிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய உண்மை அம்பலமானது. மேலும், இச்சம்பவம் குறித்து சிறுவனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 12 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!