12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்னர், மாணவர்கள், விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டுமென தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பால் மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
வருகின்ற 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கரோனா போன்ற பேரிடர் காலத்தில் மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. பொதுமுடக்கத்தால் போக்குவரத்து வசதியும் கிடையாது.
இது மாணவர்களை வேண்டுமென்றே தேர்வுத்துறை அலைக்கழிக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி, பள்ளிகளிலேயே விண்ணப்பங்களை பெறுவதற்கு தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அழைப்பை பதிவுசெய்து அவர்களை பேச அனுமதிக்கலாமே? முருகன் - நளினி விவகாரத்தில் நீதிபதிகள்