சென்னை: திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (22-10-2020), தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக தலைமையேற்று தொடங்கிவைத்து பேசினார்.
அதில், "இந்த நாட்டில் தற்போது வேலைவாய்ப்பு தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். ஏற்கெனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.
இன்றைய தினம், வேலை இருக்கிறது, வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று சொல்வதே அரிய வார்த்தையாக ஆகிவிட்டது. அனைவரும் படிக்க வேண்டும். வேலைக்குப் போக வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐ.டி பாலிசியை தமிழ்நாடு தான் உருவாக்கியது. பள்ளிக் கல்வி தகவல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டது. 1996 - 2000 காலக்கட்டத்தில் 632 ஐடி நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தன. 1994-ஆம் ஆண்டு 12 கோடி ரூபாயாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000-ஆம் ஆண்டில் 1900 கோடி ரூபாய் ஆனது.
சிப்காட் உள்ளிட்ட தொழிற் நிறுவனங்களை கொண்டு வந்ததையடுத்து "சென்னை இந்தியாவின் டெட்ராய்ட்" என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் எழுதியது. இவை அனைத்திற்கும் காரணமானவர் கலைஞர்.
இத்தகைய கலைஞர் அரசு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இருந்தால் தமிழ்நாட்டின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு இருக்கும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேசிய அளவிலான வேலையின்மை பட்டியலில் தமிழ்நாடு