சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் என்ற தலைப்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக உரையாற்றிய அவர், "பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் கடலோர மக்களின் வாழ்வாதாரம் வருங்காலங்களில் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசுபாட்டை குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் 'தமிழ்நாடு நெய்தல் நீட்சி இயக்கம்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உலக வங்கி நிதியுதவில் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஈரோட்டில் வனவிலங்கு சரணாலயம்: அழிந்து வரும் வன உயிரினங்களைக் காக்க ஒரு தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு அவசியம். எனவே, நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தை தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிச்செட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில், தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் என்ற புதிய சரணாலயத்தை அரசு ஏற்படுத்தும். இது மாநிலத்தின் 18-வது வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
மரக்காணத்தில் பறவைகள் பன்னாட்டு மையம்: மத்திய ஆசியாவின் பறவைகள் வலசைப் பாதையில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையில் பறவைகள் நமது மாநிலத்துக்கு வருகின்றன. பறவைகளின் பாதுகாக்பைப் பேணவும், பறவையியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், இயற்கையில் பறவைகளின் பங்கை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மரக்காணத்தில் ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.
காலநிலை விழிப்புணர்வுத் திட்டம்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மகளிரின் முக்கியப் பங்கை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் காலநிலை மாற்ற வீராங்கனைகள் என்ற காலநிலை விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதற்கட்டமாக 500 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள். இதற்காக அவர்களுக்கு ரூ.20 கோடி செலவில் மின் ஆட்டோக்கள் வழங்கப்படும். சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1,248 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: "பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அனைத்து பள்ளிகள்" - நிதியமைச்சர்!