சென்னை : முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 50 சதவிகித மானியத்துடன் விவசாய குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வீதம் 89 இடங்களில் மதிப்புக்கூட்டு மையங்கள் துவங்க நிதிஉதவி வழங்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத் தறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு, பயறுவகைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பயறுவகைப் பயிர்களின் சாகுபடியினை தீவிரப்படுத்தும் திட்டத்தினை துவங்குவதற்கு அரசு சிறப்புக் கவனம் எடுத்துள்ளது.
சம்பா நெல் அறுவடைக்குப்பிறகு, நெல்வயலில் இருக்கும் ஈரப்பதத்தினை பயன்படுத்தியும், பாசன வசதி உள்ள இடங்களில் இறவைப் பயிராகவும் சாகுபடி செய்து தமிழ்நாட்டில் பயறு வகை உற்பத்தியினை உயர்த்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி, சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள கிராமங்களில் அறுவடைக்குப்பின் நெல் தரிசாக உளுந்து அல்லது பாசிப்பயறு சாகுபடி செய்வதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில், கிராம வாரியாக தீவிர முகாம்கள் நடத்த மாவட்ட அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளைச் சாகுபடி செய்வதற்குத் தேவையான உயர் மகசூல் ரக விதைகளை போதுமான அளவில் வேளாண் விரிவாக்க மையங்களில் முன்கூட்டியே இருப்பு வைக்குமாறு, துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், கிராமங்களில் சிறப்புக்கூட்டம் நடத்தி, அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, கால்நடைகளை மேயவிடாமல் பயறுவகைப் பயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும் துறை அலுவலர்கள் விளக்க உள்ளனர்.
பயறுவகைப் பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில், சான்று விதை உற்பத்தி மற்றும் விநியோகம், உற்பத்தியை உயர்த்தும் இடுபொருட்களான உயிர் உரங்கள், பயறு நுண்ணூட்டக் கலவை, ஜிப்சம், பயிர்பாதுகாப்பு மருந்துகள், சுழற் கலப்பை, விசைத்தெளிப்பான் போன்ற வேளாண் கருவிகள், வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்கள், தார்ப்பாய்கள் போன்ற பல்வேறு இடுபொருட்கள் அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நெல் தரிசாகப் பயறு வகைகள் அதிகம் சாகுபடி மேற்கொள்ளப்படும் கிராமங்களில் இதற்கென சிறப்புச் செயல் விளக்கங்களில், தரமான விதை, விதை நேர்த்தி, பயிர் எண்ணிக்கை பராமரிப்பது, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டக்கலவையினை பயன்படுத்துவது, பூக்கும் தருணத்தில் உரக்கரைசல் கொண்டு பயறு செடிகளின் மேல் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் வாயிலாக விளக்கமாக எடுத்துரைக்கப்படும்.
விவசாயிகள் குழுக்கள் மூலம் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள 138 பயறு உடைக்கும் இயந்திரங்களுடன், நடப்பாண்டில் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், 50 சதவிகித மானியத்துடன் குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வீதம் 89 இடங்களில் மதிப்புக்கூட்டு மையங்கள் துவங்க விவசாயிகள் குழுக்களுக்கு நிதிஉதவி வழங்கப்படும்.
தனிப்பட்ட விவசாயிகள் மூலமாகப் பயறு உடைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் நிறுவுவதற்கு 40 சதவிகித மானியம் வழங்கப்படும். அறுவடைக்குப்பின் விவசாயிகளிடமிருந்து உளுந்து மற்றும் பாசிப்பயற்றைக் குறைந்த பட்ச ஆதரவு விலையில் அதாவது உளுந்து கிலோவுக்கு ரூ.63/-லும், பாசிப்பயறு கிலோவுக்கு ரூ.72.75/-லும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாகக் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயறு வகை சாகுபடியினை தீவிரப்படுத்தும் அரசின் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகளிடையே விளக்கும் வகையில், கருத்தரங்குக் கூட்டம் நடத்த மாவட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் இந்த திட்டத்தைப் பயன்படுத்தி, பயறுவகை பயிர்களை அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்து பயன் அடையுமாறு விவசாயிகளை வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: SI Audio: ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தொல்லை - தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்ட எஸ்ஐ