எம்ஜிஆர் சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனி்சாமி கூறியதாவது, ”தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளிக்கும்விதமாக பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர், ”காவியை களங்கம் எனக் குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர், களங்கமான தேசியக்கொடியைத் தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக்கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை, பச்சை நிறம்கொண்ட கொடியை ஏற்கிறாரா?" என்று கேள்வியெழுப்பி தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காணொலி ஒன்றினை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் எஸ்.வி. சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அப்புகாரின் அடிப்படையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், வழக்கில் காவல் துறையினர் தன்னை கைதுசெய்யக்கூடும் எனக் கூறி, எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி. சேகர் சார்பில் வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனு தாக்கல்செய்யப்பட்டது. அம்மனுவில், “தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர், தான் வாழ்நாள் முழுதும் இனி ஒருபோதும் தேசியக்கொடியை அவமதிக்கும்வகையில் பேச மாட்டேன் எனத் தெரிவித்தார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கானது இன்று (செப். 09) மீண்டும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை சார்பில் முன்னிலையான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ. நடராஜன், தேசியக்கொடியை அவமதித்தது, முதலமைச்சர் பேச்சுக்கு களங்கம் கற்பித்தது ஆகியவற்றிற்காக வருத்தம் தெரிவித்து எஸ்.வி. சேகர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த உத்தரவாத மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
காவல்துறை விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை எஸ்.வி. சேகரை காவல் துறை கைதுசெய்யக்கூடாது என உத்தரவிட்டார்.