சென்னை: மாதவரம் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவசங்கரன். இவர் நேற்றிரவு ( ஏப்.14 ) தனது நண்பர்களுடன் காரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் மது அருந்த சென்றுள்ளார். பின்னர் அங்கு மது அருந்தி விட்டு சிவசங்கரன் அதற்குண்டான பணத்தை செலுத்த வேண்டி பில் கவுண்டருக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கும் சேர்த்து பணம் செலுத்துமாறு கேட்டுள்ளார்.
உடனே உதவி ஆய்வாளர் சிவசங்கரன் ‘நான் ஏன் உனக்காக பணம் செலுத்த வேண்டும்’ என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பார் ஊழியர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பியதை அடுத்து சிவசங்கரன் காரில் தனது நண்பர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலை அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென உதவி ஆய்வாளர் காரை வழிமறித்து அவரை கீழே இறங்க சொல்லி சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிச் சென்ற சிவசங்கரன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
பின்னர் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் சூடு பிடிக்கும் குட்கா வழக்கு.. முன்னாள் டிஜிபிக்கள் மீது வழக்கு தொடர அனுமதி?