திரைத்துறையில் அசாத்திய சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், 'கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50ஆவது ஆண்டு, இம்மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினரைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்துக்கு, இது மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
முயற்சிக்கு முன்னுதாரணமாகவும், எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், தமிழ்த் திரையுலகிற்குத் தூணாகவும், இளைஞர்களுக்கு எழுச்சியாகவும், உயர்வுக்கு ஊன்றுகோலாகவும், வானுயர பெயரோங்கி வாழும் ரஜினிகாந்த், 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சாதனையாளர் சிறப்பு விருது பெறப்போவது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமைக் கொள்கிறது.
விருது பெறபோகும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளையும், அப்பெருமையை வழங்கிட்ட மத்திய அரசுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது' என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு