தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மீதான மானியக்கோரிக்கை இன்று நடைபெற்றது. அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மூன்றாம் பாலின மக்களுக்கு திருநங்கைகள் என பெயரிட்டதாகவும், அவர்களுக்கான நலவாரியம் அமைத்ததாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தற்போது திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்ய முடியுமா? அதனை இலவசமாக மருத்துவக் காப்பீடு திட்டத்தில் செய்ய முடியுமா? என சரவணன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனியாக கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அங்கு ஏற்கனவே 17 திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய விஜய பாஸ்கர், மற்றொரு கிளினிக் மதுரையில் அமைய உள்ளதையும் தெரிவித்தார். திருநங்கைகளுக்கு இந்தச் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.