சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த கோயில் புனரமைப்பு குழு தொடர்பான வழக்கு உள்ளிட்ட சில மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், நேற்று (நவ.18) விசாரணைக்கு வந்தன.
அப்போது, கோயில்கள் சீரமைப்பு குழுவில் இடம் பெற உள்ளவர்களின் பெயர்களை பரிந்துரைத்து, அரசு தரப்பிலும், அறநிலையத்துறை தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, சீரமைப்பு குழு மாற்றியமைப்பு தொடர்பாக, விரைவில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அரசு நியமித்த குழுக்களில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்களை குறிப்பிட்டு மனு தாக்கல் செய்யும்படி, அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.
கோயில்களை பார்வையிட்டு, எந்தெந்த கோயில்கள் சிதிலம் அடைந்துள்ளன என்பது குறித்து, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 127 கோயில்கள் சிதிலம் அடைந்திருப்பதாகவும், அவற்றில், 90 கோயில்களை சீரமைக்க திட்டம் தயாராக உள்ளதாகவும் அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோயில்களில் உள்ள குறைபாடுகள் குறித்து, நேரடியாக புகார் தெரிவிக்க இ -மெயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அறநிலையத்துறை ஆணையர் கண்காணிப்பதாக அறநிலைய துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை, வரும், 25ஆம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.