சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்த என்.நடராஜன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தனது வாதத்தால் குறைத்தவர்.
மேலும், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐ. தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் பல்வேறு வழக்குகளில் கருணாநிதிக்காக வாதாடியவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கிலும் முதலில் இவர்தான் ஆஜராகி வந்தார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தலைமை வழக்கறிஞராக உள்ள ஆர். சண்முகசுந்தரம், திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான குமரேசன், மூத்த வழக்கறிஞர் மோகன் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்கள் இவருக்கு ஜூனியராக பணியாற்றியுள்ளனர்.
பல்வேறு வழக்குகளில் தனது வாதத்திறமையால் வெற்றி பெற்ற இவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவம்பர் 11) காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.