சென்னை, பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானத்தில் பெருமளவில் ஹவாலா பணம் கடத்தப்படவிருப்பதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை கண்காணித்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த சதக்கத்துல்லா (37), முகமது அலி அக்பர் (61), தேனியைச் சேர்ந்த முகமது அப்துல்லா (37), சென்னையைச் சேர்ந்த அபு ஜாவித் (27), சிவகங்கையைச் சேர்ந்த ஷாஜகான் (57) ஆகிய ஐந்து பேர் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு பாதுகாப்பு சோதனைப் பகுதிக்குச் சென்றனர்.
இந்நிலையில், இந்த 5 பேர் மீது சந்தேகம் வலுத்ததை அடுத்து, சுங்கத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பேசியதையடுத்து அவர்கள் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அவர்கள் கொண்டு வந்த பெட்டியின் டிராலி கைப்பிடி சற்று கனமாக இருந்த நிலையில், சுங்கத்துறையினர் அவற்றைக் கழற்றி பார்த்தபோது அதில் சவூதி ரியால், குவைத் தினார், அமெரிக்க டாலர், ஒமென் ரியால் என வெளிநாட்டுப் பணம் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது.
இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், ஐந்து பேரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சியின் மதிப்பு 51 லட்சத்து 28 ஆயிரம் எனவும் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.