சென்னை சின்னபோரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மகாகவி பாரதியார் 101ஆவது நினைவு தினம் மற்றும் இம்மானுவேல் சேகரனாரின் 65ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது திரு உருவப் படத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்த்தூவி மரியாதை செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாதிய ஏற்ற பாகுபாடுகளை புறந்தள்ளபாடுபட்டவர் இம்மானுவேல் சேகரன். அவர் தமிழ் குடியில் பிறந்ததனால் என்றும் தமிழன் பெருமைக்குரியவன். பெரும்பாவலர் பாரதிக்கும், இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்த தலைமுறையாவது சாதி மத பேதம் இல்லாமல் தமிழ் தேசிய பிள்ளைகளாக வளர வேண்டும்.
திமுகவின் திராவிட மாடல் என்பதே இரட்டை வேடம் தான். எட்டு வழிச்சாலையை எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக எதிர்த்து பேசியது, ஆனால் இப்போது ஆதரித்து பேசுகிறது. அதேபோல தான் மின்கட்டண உயர்வு மத்திய அரசின் அழுத்தம் என மாநில அரசு உயர்த்துகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களின் மனநிலை உணர்வுகளுக்காக போராடிய திமுக, தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவது இரட்டை வேடத்தன்மையை சுட்டிக்காட்டுகிறது அதுதான் திராவிட மாடலின் ஆட்சி முறை.
அண்ணாமலைக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவ்வப்போது அவர் பேசுவது வேடிக்கை ஆகி விடுகிறது. நீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ், அதை ஆதரித்தது திமுக, செயல்படுத்தியது பாஜக, ஆகவே அண்ணாமலை திமுக மீது வீண்பழி போடுகிறார். காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் அப்போதே கூறினார். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரைக் குறிப்பிட்டு வள்ளலார் பூமி, பூலித்தேவர் பூமி என்று ஏன் அழைக்கவில்லை. பெரியார் மண் எனக் கூறுவது ஏன்?.
தரமான மருத்துவரை உருவாக்கும் வழி எனக்கூறி நீட் தேர்வை நடத்துவதாக மத்திய அரசு கூறி, இதன் மூலம் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் நடைபெறும் முறைகேடுகளால் தரமற்ற போலி மருத்துவர்களை உருவாக்குகிறது. ஆசிரியர்களால் அமையப்பெற்ற அரசு தான் இது என்று நேற்று ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முதலமைச்சர் பேசியிருந்தால் அப்படி ஆசிரியர்களால் அமைக்கப்பட்ட ஆட்சி தான் இவ்வளவு கேவலமாக நடைபெறுகிறதா?.
அரசியல் களத்தில் தனித்து நிற்பது வீண் சவடால் என்று திருமாவளவனின் கருத்தை மதிக்கிறேன். ஆனால், அதை ஏற்கவில்லை. 4 சீட்டுக்காக அவர் அனைத்து மேடைகளிலும் பேசிய வீடியோக்கள் எல்லாம் உள்ளன. ஆகையால் அவர் பட்ட அசிங்கத்தை நாங்கள் பட்டுவிடக்கூடாது என்று தான் போராடி வருகிறேன். எனவே, தற்காலிக வெற்றிக்காக நிரந்தர வெற்றியை இழக்க முடியாது.
புதிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் உள்ள பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசின் அறிவிப்பு, சர்வாதிகாரத்தனம் அல்ல, கொடுங்கோல் ஆட்சி. மாநிலங்களின் வரி தான் மத்திய அரசுக்கான வருவாயினைப் பெருக்கும். நான் முதலமைச்சராக இருந்தால் வரி தர முடியாது என சொல்லிவிடுவேன். என்னை மீறி யாராவது ஜிஎஸ்டி வரி செலுத்தினால் அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் நிறுத்தி விடுவேன்.
ரூ.2 லட்சத்து முப்பதாயிரம் அதானிக்கு கடன் கொடுத்து வைத்துள்ளது மத்திய அரசு, அதானி திவால் ஆகிவிட்டால் இந்தியா பிச்சைதான் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'திமுக தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற்றிடுக'... ஆசிரியர்களின் போராட்டம்