பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை என்றாலும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு பதிலாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வை வரும் 17ஆம் தேதி தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.