ஜிஎஸ்டி இழப்பீடு
மூலப் பொருள்களுக்குச் செலுத்தப்படும் ஜிஎஸ்டி வரிக்கு மத்திய அரசு உள்ளீட்டு (GST input credit) வரியைத் திரும்பச் செலுத்துகிறது. ஆனால், எந்தவித வியாபாரமும் செய்யாமல் போலி ஆவணங்கள் தயாரித்து நடைபெறாத விற்பனைக்கு உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெற்று மோசடி நடைபெறுவது தொடர்கதையாகிவருகிறது. இதனைத் தடுக்க ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.
இந்த நிலையில், போலி ரசீது மூலம் 10 கோடி ரூபாய்க்கு ஜிஎஸ்டி இழப்பீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த பிரபல ரெடிமேடு நிறுவனத்தின் இயக்குனர், மோசடியில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் இருவரையும் சென்னை வடக்கு ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.
போலி நிறுவனங்கள்
போலி நிறுவனங்கள் தொடங்கி அதன்மூலம் எந்தவித பரிவர்த்தனைகளும் நடத்தாமல் சுமர் 150 கோடி ரூபாய்க்கு சரக்குகளைப் பெற்றதாக ரசீதுகளைச் சமர்ப்பித்து 10 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி உள்ளிட்டு வரி பலன்களை மோசடியாகப் பெற்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி தொடர்புடைய நபர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்து சோதனை நடத்தி குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதற்காக நான்கு போலி நிறுவனங்கள் தொடங்கி அவற்றுக்கு வங்கிகள் மூலமாக அதிகாரப்பூர்வமாகப் பணத்தை அனுப்பி வேறு போலி நிறுவனங்கள் மூலமாக அதனை தங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்றுவருவதாக சென்னை வடக்கு ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை முதன்மை ஆணையர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
கைது
கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த இந்த மூன்று நபர்களையும் ஜிஎஸ்டி அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் நேற்று (டிசம்பர் 16) கைதுசெய்தனர். இவர்கள் எழும்பூர் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் முன்பு முன்னிறுத்தப்பட்டனர். பின்பு, நடுவர் வரும் 22ஆம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். மூவரும் சுமார் 40 வயதுடைய நபர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.