சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இதன்மூலம் இந்த ஆண்டு மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து ஷிவானி உள்ளிட்ட சில மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்குத் தொடரப்பட்டது.
அதில், தமிழ்நாடு அரசின் இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது. எனவே, இதனை ரத்துசெய்ய வேண்டும், இது தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதரார் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், அரசின் இந்த உத்தரவு என்பது ஒருதலைபட்சமான நடவடிக்கை, சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும், இது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் இதே கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கிய உத்தரவிற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கான சலுகையை, புதுச்சேரி மாணவருக்கு வழங்க இயலாது!