சென்னை: தமிழ்நாடு அரசு ரம்மி விளையாட்டை தடை செய்திருக்கும் நிலையில், கல்வித்துறை ரம்மி விளையாடுவது எப்படி? என மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் பாடத்தில் இடம் பெற்றிருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதனையடுத்து இந்த பாடப்பகுதி முழுமையாக நீக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த கல்வி ஆண்டில் புதிய பாடப்பகுதி இடம்பெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து மன உளைச்சல் காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதன் காரணமாக ரம்மி விளையாட்டை தமிழ்நாடு அரசு தடை செய்திருக்கிறது. இதற்கான சட்டத்தையும் கொண்டு வந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருக்கிறது. தற்போது வரை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்ற சூழலில், பள்ளிக்கல்வித்துறையின் ஆறாம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி ?என்ற பகுதி இடம் பெற்று உள்ளது.
இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை 6 ம் வகுப்பு கணக்கு மூன்றாம் பருவ பாட புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த பாடப்பகுதி உடனடியாக நீக்கப்படுகிறது எனவும், வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும்போது இந்த பாடம் இருக்காது எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வேறொரு பாடப்பகுதியை சேர்த்திருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மியால் யாரேனும் இறந்தால் ஆளுநர் தான் பொறுப்பு - ஜி.ராமகிருஷ்ணன்