இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவல் அச்சம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், துபாயில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்துறை தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊதியம் குறைப்பு, தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். துபாய் அரசின் மனிதாபிமானமற்ற இச்செயல் கண்டிக்கத்தக்கது.
துபாயில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய சூழலில் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை அனைவரும் சமூக இடைவெளியுடன் கூடிய இடங்களில் தங்க வைத்து, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பெரும்பான்மையான தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு, பணிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
அதுமட்டுமின்றி, மிகவும் நெருக்கடியான அறைகளில் பல அடுக்கு படுக்கைகள் அமைக்கப்பட்டு, சிறிய அறைகளில் கூட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து அதிகமுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் போதிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. அதனால், துபாயில் பணியாற்றிய கடையநல்லூரைச் சேர்ந்த முகமது ஷா என்பவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். குவைத், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான் நிலவுகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் அரசுகளைத் தொடர்பு கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து பேச வேண்டும். துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில், சமூக இடைவெளியுடன் வாழ வகை செய்தல், கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை மருத்துவம் வழங்குதல், கரோனா அச்சம் விலகும் வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல், பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை உறுதிசெய்யும்படி சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இது குறித்து மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுத வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.