சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்ததாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றஞ்சாட்டியது.
கடந்த மாதம் ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த நந்தகோபால் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கந்தசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.
கந்தசாமி ஐஏஎஸ் நடவடிக்கை
புதிய நிர்வாக இயக்குநராக கந்தசாமி ஐஏஎஸ் பொறுப்பேற்றதும் ஆவினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
முதற்கட்டமாக ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் 18 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தி வந்த C/F ஏஜென்ட் முறையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடைபெற்ற பணி நியமனங்களை ரத்து செய்தும், அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
பால் முகவர்கள் கோரிக்கை
ஆவினில் முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்ட ரமேஷ்குமார் உள்ளிட்ட பொது மேலாளர்களை பணியிடை நீக்கம் செய்யாமல், விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வராது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை வைத்தது.
பொது மேலாளர்கள் இடமாற்றம்
இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த முறைகேடுகளை விசாரிக்கும் வகையில், நேற்று (ஜூலை 17) 34 பொது மேலாளர்களை கூண்டோடு இடமாற்றம் செய்து கந்தசாமி ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம் தண்டனையாகாது
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், "ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக 34 பொது மேலாளர்கள் கூண்டோடு இடமாற்றம் என்பது வரவேற்புக்குரியதாக இருந்தாலும், ஊழல் அலுவலர்களுக்கு இது தண்டனையாக அமையாது.
தவறு செய்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமானால், முதலில் பணி நீக்கம் செய்து விட்டு விசாரணை நடத்துவதே சரியான தீர்வாக இருக்க முடியும்.
பணி நீக்கம் வேண்டும்
படித்து முடித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது வெறும் கனவாகிப் போன நிலையில், ஊழல் அலுவலர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.
எனவே, தற்போது இடமாற்றம் செய்யப்பட்ட ஊழல் அலுவலர்களை பணி நீக்கம் செய்து படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஆவின் முறைகேடு - 34 பொது மேலாளர்கள் பணியிட மாற்றம்