ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் முஃப்தி முகமது சையது. இவரது மகள் ரூபையா செரிஃப் (45). இவருக்கு திருமணமாகி சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வேளச்சேரியில் கார் விற்பனை நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில், ரூபியா செரிஃப் நேற்று (ஜூலை 28) அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், தனது செல்போனுக்கு அறிமுகமில்லாத மூன்று தொலைபேசி எண்களில் இருந்து வந்த அழைப்பில் அடையாளம் தெரியாத நபர்கள், மூன்று நாள்களாக ஆபாசமாக பேசி தொந்தரவு செய்வதாகவும், இதனுடன் அவர்கள் தொடர்புகொண்ட மூன்று தொலைபேசி எண்ணையும் இணைத்து கொடுத்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில், அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொலைபேசி எண்ணை கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். ஏற்கனவே, இவரது தந்தை முஃப்தி முகமது அமைச்சராக இருந்தபோது பயங்கரவாதிகள் ரூபையாவை கடத்தி சென்று பின்னர் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் ரயில்வே துறைக்கு ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு!