சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் (PUTER Foundation) என்ற அமைப்பைத் தொடங்கி, அரசு நிதியைப் பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த அமைப்பை செயல்படச் செய்ததாக, பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல் துறையில் புகார் அளித்திருந்தனர்.
அதேபோல, சாதிப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்த நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் காவல்துறை ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, வருகிற வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், தனது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அதை ரத்து செய்யக் கோரி ஜெகன்நாதன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்ற போது, நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் இருந்ததாகவும், அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொலைதூரக் கல்விப் பிரிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் செய்ததால் எழுந்த கடும் எதிர்ப்பையும், உயிருக்கு அச்சுறுத்தலையும் மீறி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஜெகன்நாதன் தெரிவித்துள்ளார்.
அரசின் அனுமதி இல்லாமல் ஓர் அமைப்பை (PUTER FOUNDATION) தொடங்கியதாகக் கூறுவது தவறு என்றும், அரசுத் துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் பின்னணியில் தனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டு என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வரும் வியாழக்கிழமை (ஜனவரி 18) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை எலியார்பத்தி மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு!