கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் 26 முதல் 29ஆம் தேதிவரை முழு அடைப்பு அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் இயங்கிவந்த பேக்கரிகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். இதில் அத்தியாவசிய பொருளான காய்கறிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி விற்பனை சந்தைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், காய்கறி, பழங்களை விற்பனை செய்ய நடமாடும் வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக மளிகைக் கடைகளிலேயே காய்கறிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர்த்து, அந்தந்த பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை அதிக அளவில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தற்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டு, நடமாடும் வண்டிகள் மூலமே காய்கறிகள் விற்பனை செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதால் பொதுமக்களும் வியாபாரிகளும் கலக்கமடைந்துள்ளனர்.
நோய் பாதிப்பு பரவலைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், காய்கறி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பொதுமக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.டி.ஆர். ராஜ சேகரன், நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறிதாவது, "காய்கறிகள் விற்பனை செய்யும் வெளி சந்தைகளும், கடைகளும் மூடப்பட்ட பின் கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரம் இருக்காது. நாங்கள் மட்டும் கடையை திறந்து என்ன செய்ய? நாங்களும் மூடத்தான் வேண்டும்.
இது தொடர்பாக நாளை கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரம் செய்யும் 27 சங்கங்கள் ஒன்றாக கூடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதில்தான் இறுதி முடிவு தெரியவரும். இந்த பிரச்னை தொடர்பாக அரசுடன் உயர்மட்ட அளவில் பேசி வருகிறோம், என்ன முடிவு எடுகிரார்கள் எனத் தெரியவில்லை. எங்களது முடிவை நாங்கள் அறிவித்துவிட்டு ஒத்துழைப்பு கொடுக்கும் கடைகளை அடைத்து விடுவோம்.
காய்கறி கடைகளுக்கு அனுமதி கொடுக்காமல் நடமாடும் காய்கறி வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு போதிய அளவிற்கு வியாபாரம் நடைபெறாது. கடையை திறந்தும் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை" என்றார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேடு காய்கறி சந்தை சென்னை மாநகரில் முக்கிய சந்தையாக விளங்குகிறது. நகரின் பல்வேறு பகுதியில் உள்ள சிறு, குறு வியாபாரிகள் இங்கிருந்து காய்கறிகளை வாங்கிச் சென்றதான் தங்கள் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது இது முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் சென்னை நகரில் நான்கு நாள்களுக்கு அத்தியாவசியமான காய்கறிகள் கிடைக்காத நிலை ஏற்படும். பல இடங்களில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை பலமடங்கு அதிகரிக்கக்கூடும். இதனால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் அதிக விலைக்கு காய்கறி விற்பனை: மக்கள் வேதனை