இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி விதிமீறல்கள் வரையறை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 138 ஏ விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக மேலும் சில பிரிவுகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வசிப்பவர்கள் அதற்குரிய அலுவலர் அவ்வப்போது தெரிவிக்கும் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஒவ்வொரு முறைக்கும் ரூ. 500 அபராதம் விதிக்கலாம். முகக் கவசம் அணியும் நபர்கள் வாய் மற்றும் மூக்கு முழுவதுமாக மூடும் வகையில் அணிய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் உரிய அலுவலர் ஒவ்வொரு முறைக்கும் ரூ. 200 அபராதம் விதிக்கலாம். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும்.
தகுந்த இடைவெளியை பொது இடங்களில் கடைபிடிக்காமல் கூட்டமாக இருந்தால் உரிய அலுவலர்கள் ரூ. 500 வரை அபராதம் விதிக்கலாம். சலூன் கடைகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அதற்குரிய அலுவலர்கள் ரூ. 5000 வரை அபராதம் விதிக்கலாம்.
அரசு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்த இடங்களில் வசிப்பவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பின்பற்றாவிட்டால் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாயும், வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 5000 ரூபாயும் அபராதம் விதிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இந்த அபராதம் விதிக்கும் முறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.