இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி, நடு வீதியில் வசித்து வந்த கண்ணன் முதலியார் என்பவருடைய மகன் ராஜா (49) கரோனா பெருந்தொற்று காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த 8 ஆம் தேதி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று(மே.20) காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் மருத்துவச் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று (மே.20) காலை சுமார் 9 மணி அளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது, அங்கு வந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவருடைய வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு வெளியேற முற்பட்டனர் என்றும், அதைத் தடுக்க முயன்ற அவருடைய மனைவி கஸ்தூரியை தடுத்துவிட்டு, வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று விட்டனர் என அவரது மனைவி புகார் செய்துள்ளார்.
மேலும், போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டுள்ளனர் எனவும், இதை சற்றும் எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது, நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார் என, ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வலம் வருவதைப் பார்க்கும் போது, நெஞ்சு பதைப்பதைக்கிறது.
இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலையில் நடந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.