சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என மொத்தம் 660 இடங்கள் உள்ளது.
உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது.
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ஜூன் 12ஆந் தேதி காலை 10 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 18,752 மாணவர்களும், பிடெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 3,783 மாணவர்கள் என மொத்தம் 22,535 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறப்பு பிரிவினரான விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ படை வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 17ஆம் தேதி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் (பிவிஎஸ்சி மற்றும் ஏஎச்) இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் படிப்பிற்கும், 18ஆம் தேதி பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றிக்கு விண்ணப்பித்த மாணவர்களில் கல்வியியல் பிரிவு மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருவதை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் ஆய்வுச் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளநிலை கால்நடை மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு இடங்களைத் தேர்வுச் செய்ய 19ஆம் தேதி முதல் கல்வியியல் பிரிவு மாணவர்கள் ஆன்லைனில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்யலாம். இவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டுப் பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெறுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பிவிஎஸ்சி மற்றும் பிடெக் படிப்புகளில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. மொத்தம் 22,535 விண்ணப்பங்கள் பிவிஎஸ்சி மற்றும் பிடெக் படிப்புகளுக்கு பெறப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு பிவிஎஸ்சி படிப்புகளில் 600 இடங்களும், பிடெக் படிப்புகளில் 100 இடங்களும் உள்ளன.
மேலும், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவத்திற்கு யார் காரணம்? இளஞ்சிறார் குற்றத்திற்கு சினிமா தான் காரணமா? குற்றவியல் துறை கூறுவது என்ன?