சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸ் ரோட்டரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி (72). திருமணம் முடித்துக்கொள்ளாமல் வாழ்ந்துவந்த இவர், முதியோர் ஓய்வு ஊதியத் தொகையை நம்பியும், சிறு, சிறு வேலைகள் செய்தும் பிழைப்பு நடத்திவந்தார்.
நேற்றிரவு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசிவிட்டு இரவு 10 மணி அளவில் உறங்கச் சென்றுள்ளார். இன்று காலை வரை அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
மேலும், கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் வெட்டுக் காயங்களுடனும், ஆடைகள் கலைந்த நிலையிலும் அவர் இருந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த ராயப்பேட்டை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆதிலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தை மயிலாப்பூர் துணை ஆணையர் செஷாங் சாயி ஆய்வுசெய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தாயை தேடிச் சென்ற குழந்தை ஏரிக்குட்டையில் மூழ்கி உயிரிழந்த சோகம்