சென்னை: மருத்துவப்படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் தனியார் மருத்துவக்கல்லூரியில் அதிகப்பணம் வசூலிப்பதை தடுப்பதற்காக கல்லூரிக்கான முழு கட்டணத்தையும் கலந்தாய்வின் பொழுதே செலுத்தும் வகையில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, 'தனியார் மருத்துவக்கல்லூரியில் இடங்களைத்தேர்வு செய்து சேரச் செல்லும் மாணவர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது எனப்புகார் வருகிறது. அதனைத்தடுப்பதற்காக இந்தாண்டு முதல் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த உடன் மாணவர்கள் கல்லூரிக்கான அனைத்து கட்டணங்களையும் சேர்த்து கலந்தாயின்பொழுதே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவிடம் கட்டணத்தை செலுத்திய மாணவர்கள் அவர்களுக்குரிய ஒதுக்கீட்டு ஆணையை மட்டும் பெற்றுக்கொண்டு கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம். அந்தக் கட்டணத்தில் கல்வி கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் சேர்த்து வசூல் செய்யப்படும்.
தேசிய மருத்துவ ஆணையம் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய குழுவிடம் அளித்தோம். இந்த உத்தரவின் மீது தனியார் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
நடப்பாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்குரிய கலந்தாய்வினை ஆன்லைன் மற்றும் நேரடியாக நடத்தவும் தயார் நிலையில் உள்ளோம். தேசிய தேர்வுமுகமையிடமிருந்து மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை.
அகில இந்திய அளவில் மருத்துவ குறிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை. அந்தக் கலந்தாய்வு தொடங்கி முதல் சுற்று முடிந்த பின்னர் ஐந்து நாட்கள் கழித்து தான் தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பிற்கான முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வை ஆன்லைன் அல்லது நேரடி முறையில் நடத்துவது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவுரைப்படி அறிவிக்கப்படும். எம்பிபிஎஸ் படிப்பில் தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 5,175 இடங்களும் 20 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 3,050 இடங்களும்; பல் மருத்துவப்படிப்பில் இரண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களும் 20 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 1,960 இடங்களும் உள்ளன.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 10,385 இடங்கள் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழு மூலம் நிரப்பப்பட உள்ளன. மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 435 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 114 இடங்களும் என 569 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நீட் தேர்வினை எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதாக கூறுகின்றீர்கள். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மாணவர்கள் தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திண்டுக்கல்லில் முதன்முறையாக இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்