நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மழை நீரை சேகரிப்பேன் என்ற உறுதிமொழியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீர் நிலைகள் புனரமைப்பு பணிகளுக்காக சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு சமூக அறக்கட்டளைகளுடன் மாநகராட்சி நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, 34 குளங்களை தூர்வார தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்பு 12.8 லட்சம் கட்டடங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அனைத்து உள்ளாட்சி கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அடுக்கு மாடி குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் என்றும் தெரிவித்தார்.
மூன்று மாத காலத்துக்குள் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், மழைநீர் சேகரிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சியை மூன்று மாத காலத்துக்குள் முடிக்காத நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்புகள் செய்தவர்கள் பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.