'டை சென்னை' அமைப்பும் குளோபல் தொழில்முனைவோர் அமைப்பும் இணைந்து சிறு குறு தொழில்முனைவோரின் சவால் குறித்த ஆய்வை நடத்தியது. தற்போது, இந்த ஆய்வறிக்கையை சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் 'டை சென்னை' அமைப்பின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிறுவனங்கள் சுமார் ஐந்து நபர்களுக்கு பணி வழங்கிவருகின்றன. சிறு குறு தொழில் நிறுவனம் சராசரியாக 13 ஆண்டு செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்குவதில் முக்கியப் பங்காற்றிவருகின்றன. நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் வரவு செலவுகளைப் பராமரிப்பது மிகக் குறைவாக உள்ளது.
ரொக்க பரிவர்த்தனை சரியாக இல்லாமலிருப்பதால் கடன் வசதி பெறுவது சிரமமாக உள்ளது. 60 விழுக்காடுக்கு மேற்பட்டோர் பட்டப்படிப்பினை முடிக்காதவர்களாக உள்ளனர். ஆனால், பெரும்பாலானவர்கள் செல்போனை பயன்படுத்திவருகின்றனர். இவற்றில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்காற்றுகிறது.
எனவே அந்தந்த தொழிலில் செய்யவேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து சிறு குறு தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் முறையில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். அரசின் திறன் மேம்பாட்டு நிதியிலிருந்து இவர்களுக்கான பயிற்சி அளிக்க முக்கியத்துவம் தர வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க: ஆயிரமாண்டுகள் பழமையான 'பதிமலை குகை' ஓவியங்களைப் பாதுகாக்க மக்கள் கோரிக்கை!