சென்னை: கரோனா பரவல் காரணமாக மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டிருந்தன. கரோனா பரவல் குறைய ஆரம்பித்ததால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதியிலிருந்து கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரை திறந்த முதல் நாளிலேயே கிண்டி, ஆலப்பாக்கம், ஆழ்வார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஆறு பேர் கடலில் குளித்துள்ளனர். அப்போது ராட்சத அலையில் சிறுவர்கள் சிக்கியுள்ளனர். அதில் பல்லாவரத்தைச் சேர்ந்த விமல் (17), ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சபரிநாதன் (17), தர்மராஜன் (17) ஆகிய மூன்று பேரும் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.
தீயணைப்புத் துறையினர், கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் வைத்து கடலில் தேடிப்பார்த்தும் சிறுவர்களின் உடலை மீட்க முடியவில்லை. இதேபோன்று ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள நியூ பீச் கடற்கரையில் ஆறு இளைஞர்கள் குளித்துள்ளனர்.
அதில் பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மேத்யூ (18) என்பவர் மட்டும் மாயமானார். நீண்ட நாள்களாகத் தேடியும் இன்றுவரை அவரின் உடல் கரை ஒதுங்கவில்லை. நேற்று (செப்டம்பர் 2) பெசன்ட் நகர் கடற்கரையில் குடும்பத்தோடு குளிக்கவந்த சுஷாந்த் என்ற கல்லூரி மாணவரும் ராட்சத அலையில் சிக்கி மாயமானார். தற்போது வரை அவரின் உடலானது கரை ஒதுங்கவில்லை.
இவ்வாறாக வெவ்வேறு கடற்கரைகளில் ஐந்து பேர் மாயமான நிலையில், தற்போது மெரினா கடற்கரையில் மீண்டும் ஒரு பள்ளி மாணவர் மாயமாகியுள்ளார்.
கடற்கரை திறக்கப்பட்ட 10 நாள்களில் ஆறு பேர் கடலில் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மணலில் வ.உ.சி.யின் உருவத்தை வரைந்து அசத்திய சிறுமிகள்