சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, கடந்த 18ஆம் தேதி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளான் நிதிநிலை அறிக்கையை எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதனிடையே, நேற்று (மார்ச் 21) முதல் மூன்று நாள்களுக்கு, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
இதில், முதல் நாளான நேற்று, முதலில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். இதனையடுத்து, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்கியது. அப்போது, எழும்பூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன், தனி நபர் குடும்ப அட்டை வழங்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, இந்த கேள்விக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.
அவையில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''ஒரு தனி நபர் யாரையும் சாராமல் இருக்கத் தனி நபர் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு 12 கிலோ அரிசி, 1 பாக்கெட் பாமாயில், 1 கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ சர்க்கரை, எரிவாயு இணைப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கி வருகிறது. 19 லட்சத்து 71 ஆயிரத்து 707 ஒரு நபர் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன" என்றார். இதனையடுத்து, இதற்குப் பரந்தாமன் அமைச்சர் பதிலை ஏற்றுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய உடனடி சட்டம் வேண்டும்... ஈபிஎஸ் வலியுறுத்தல்...