உலக மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு அரசு உயர் பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ‘வருடந்தோறும் 5 கோடியே 90 லட்சம் விலையில்லா நாப்கின்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகிறது. 2 கோடியே 30 லட்சம் வளரிளம் பெண்களுக்கும், 4,119 பெண் சிறை கைதிகளுக்கும், 2,405 மனநல மருத்துவமனையில் உள்நோயாளி பெண்களுக்கும் சானிடரி நாப்கின்கள் வழகங்கப்பட்டுள்ளது. உலகிலேயே பெண்களுக்கு சிறையிலும், மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் சானிடரி நாப்கின்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது’ என்று பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘இந்த வருடம் தமிழ்நாட்டிற்கு 380 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளோம். கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு 150 எம்பிபிஎஸ் இடங்களும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி கல்லூரியில் 150 இடங்களில் இருந்து 250 இடங்களாக உயர்ந்துள்ளது. மதுரை மருத்துவ கல்லூரியில் உள்ள இடங்கள் அதிகரிக்கும் எம்.சி.ஏ.வின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அதேபோல், மருத்துவ படிப்பிற்கான உயர்கல்வி படிப்பிற்கு 508 சீட்டுகள் பெற்றுள்ளோம். ஒரே ஆண்டில் 350 எம்பிபிஎஸ் இடங்கள் உயர்த்தியுள்ளது இதுவே முதல் முறை’ என்று தெரிவித்தார்.