சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், சிவன் தாங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன். இவர் ஸ்ரீபெரும்புதூரில் 2,000 சதுர அடி நிலத்தை வாங்கினார். இவர் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், அவரது மனைவி தனலட்சுமி, மகன் டில்லிராஜா ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திரன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர்.
அதில், நிலம் வாங்கிய பின் காவல்துறை அதிகாரிகள், உள்ளூர் கவுன்சிலர் மற்றும் வழக்கறிஞருடன் சேர்ந்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்ட போது, அதை தர மறுத்ததால் தங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசுத் துறைகளில் அதிகளவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காததால், நாளுக்கு நாள் லஞ்ச லாவண்யம் பெருகி வருவதாகவும், அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தின் மீதான பயத்தை காட்டினால் ஒழிய, அரசுத்துறைகளில் ஊழலை கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
அதனால், ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலனை நியமித்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் பணியாளர் பற்றாக்குறை - கடும் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்