சென்னை: வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார்.
அப்புகாரில் கடந்த 24ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
குற்றவாளிகளைப் போல் சித்தரிப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சாந்தி, "நான் கடந்த 25ஆம் தேதி வலிமை திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்த்தேன். அப்போது அத்திரைப்படத்தின் தொடக்கக்காட்சியில் வழக்கறிஞர்களைக் குற்றவாளிகளைப் போல் சித்தரித்தும், குற்றச்செயல்புரியும் குண்டர்களாக வழக்கறிஞர்கள் செயல்படுவது போலவும் காட்சிப்படுத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இழிவுபடுத்தி காட்சி
சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு பணியை ஆற்றி வரும் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தி காட்சியமைப்பதும், ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் தவறாக காட்டுவதும் கண்டனத்துக்குரியது.
இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்