சித்திரை திருநாளான முதல் நாளை தமிழ்நாடு முழுவதும் தமிழ்புத்தாண்டு தினமாக ஆண்டு தோறும் கொண்டாடி மகிழ்கிறோம். இந்த நாள் நமது தாய் நாட்டை போற்றும் நாளாகவும் கருதுகிறோம். இந்நிலையில், தமிழ்நாடு மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதில், "2019 மக்களவை தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்பாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. தமிழர்கள் வாழ்வில் வளமும், நலமும் ஏற்பட வேண்டுமானால் மக்கள் நலன்சார்ந்த ஆட்சிகள் அமைய வேண்டும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை, பண்பாடுகளை, வளங்களை பறிக்கிற வகையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல, நரேந்திர மோடி அரசின் கைப்பாவையாக மாநில அளவில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
ஊழலில் ஊறிப்போன அரசாகவும் இருந்து வருகிறது. மத்திய - மாநில அரசுகளால் தமிழக மக்களுக்கு இதுவரை எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே, வருகிற தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிற தமிழர்கள் அனைவரும் தங்களது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பெருமை இவற்றையெல்லாம் பறிக்கிற அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.